நாகர்கோவில், ஏப்.13: குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 52 மி.மீ மழை பெய்திருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தோவாளை, நாகர்கோவில் பகுதிகளில் சாரல் மழை காணப்பட்டது. அதிகபட்சமாக நேற்று காலை வரையில் கோழிப்போர்விளையில் 52 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 39.25 அடியாக இருந்தது. அணைக்கு 110 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 72 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 52.36 அடியாகும். சிற்றார்-1ல் 5.54 அடியும், சிற்றார்-2ல் 5.64 அடியும், பொய்கையில் 18.20 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 14.68 அடியும், முக்கடல் அணையில் 4.9 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.