கிருஷ்ணகிரி, ஏப்.9: காவேரிப்பட்டணம் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாராயணமூர்த்தி மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் காவேரிப்பட்டணம் அடுத்த தட்டக்கல் மலையை ஆய்வு செய்தனர். அதில், கல்வெட்டுகளில் பெருமுகைப்பற்று குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தட்டக்கல் மலைகளின் நடுவே சுனை அருகே பெருமுறைப்பற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியதாவது: இந்த பெருமுகையில் பைரவர் கற்சிலையை செய்து எழுந்தருளித்து சுனை ஒன்றையும் செப்பனிட்டு, இறைவனுக்கு படைக்கும் அரிசி முதலிய பொருட்களுக்காக, உதப்பிக்குட்டை என்னும் ஏரியை மான்வேலி என்னும் ஊரைச் சேர்ந்த பல்லவரையனான மலையன் என்பவன் தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது. இவர் செய்தளித்த பைரவர் சிற்பமானது இன்றும் பைரப்பன் கோவிலில் வழிபாட்டில் உள்ளது. இக்கல்வெட்டின் இடது மேற்புறம் பசுவும் கன்றும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.பெருமுகை என்ற பெயர் இப்பகுதியில் கிடைத்த கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும், 13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த இக்கல்வெட்டில் தான் இப்பெருமுகை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தட்டக்கல் மலையே அக்காலத்தில் பெருமுகை என அழைக்கப்பட்டது உறுதியாகிறது.