புதுக்கோட்டை அடப்பன்வயலில் செல்டவர் அமைக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை, ஏப்.8: புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அடப்பன்வயல் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணியில் அந்நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் பால் பண்ணை பகுதியில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில், செல்போன் டவர் அமைக்கும் பிரச்னையை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: