கோவை, ஏப். 8: கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலை தடுக்க, தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தத்துடன் நடந்த காணொலி கூட்டத்தில் கொடிசியா கலந்துகொண்டது. இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியிருப்பதாவது:தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது அது கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 3500 ஆக உள்ளது. பொதுமக்களும், தொழில் வணிக நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களின் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த சூழலில் தற்போது ஊரடங்கு கொண்டுவர முடிவு செய்யப்படவில்லை, என்றாலும் கடுமையான விதிமுறைகளோடு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் இணையான பொறுப்பு, அரசாங்கத்தோடு சேர்ந்து பொதுமக்களுக்கும் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாமாகவே முன்வந்து 15 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை ரேபிட் சோதனை செய்து கொள்ள, அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது.