பூந்தமல்லி, ஏப்.5: பூந்தமல்லியில் உள்ள பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் மூன்று கருடசேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காஞ்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கு புஷ்பகைங்கர்யமும், ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கர்யமும் செய்து வந்தவர் பூந்தமல்லியை சேர்ந்த திருக்கச்சி நம்பிகள். ராமானுஜருக்கு குருவான பரம பாகவதரான திருக்கச்சி நம்பிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மூன்று கருடசேவை நடைபெறும். முதுமை காரணமாக காஞ்சிபுரம் செல்ல இயலாத நிலையில் காஞ்சி வரதர் சூரிய மண்டலத்தில் தோன்றி இவருக்கு காட்சியளித்தார். உடன் ஸ்ரீரங்கத்து திருவரங்கனும், திருமலை திருவேங்கடவனும் காட்சியளித்தனர்.
இனிமேல் தாங்கள் காஞ்சி வர வேண்டாம் நாங்கள் மூவரும் உங்களுக்காக இங்கேயே சேவை சாதிக்கின்றோம் என்று மூவரும் பூந்தமல்லியில் நிரந்தரமாக கோயில் கொண்டனர். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் வருடத்தில் ஒரு நாள் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மூன்று கருட சேவை இத்தலத்தில் நடைபெற்று வருகிறது.