கொடிய ஆட்சியாளர்களிடமிருந்து தமிழகத்தினை காப்பாற்றும் மகத்தான பொறுப்பினை திமுக ஏற்றுள்ளது திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேச்சு

திருப்புத்தூர், ஏப். 3:  திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ நேற்று குன்றக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘தமிழகத்தில் தற்போது நடக்கவுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் குரல்வலையை நெரிக்கின்ற சக்திகளுக்கும், ஜனநாயகத்தை காப்பதற்கும் இடையே நடக்கின்ற தேர்தல். அதுமட்டுமல்ல, பல்வேறு வரிகளை விதித்து ஏழை, எளியவர், நடுத்தர மக்கள் மற்றும் பல்வேறு தொழில்களை புரியகூடியவர்களையும் வாட்டி வதைக்கின்ற ஒரு கொடுமையான ஆட்சியாளர்களிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய மகத்தான பொறுப்பினை திமுக ஏற்றுள்ளது. சமூகநீதி பெறக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. அதனால்தான், கலைஞர் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்பதை அறிவித்தார்கள். அதேபோல் தொடர்ந்து இடஒதுக்கீடுக்காக போராடியவர்கள்தான் திமுக. எதிரணியில் இருக்கக்கூடியது அதிமுக என்று சொல்ல முடியாது. அவர்கள் கட்சியையும், ஆட்சியையும் டெல்லியில் அடகு வைத்து விட்டனர். எனவே தமிழகத்தில் அதிமுக அரசு நீடிப்பது, தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லதல்ல. இந்த நிலைமாறி தமிழக மக்கள் நிம்மதியாக வாழ தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும். அதற்கு தொடர்ந்து இந்த தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றுகின்ற வாய்ப்பை நீங்கள் எனக்கு உருவாக்கி தர வேண்டும்’ என்றார்.

Related Stories: