குலசேகரம், ஏப்.2: பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் நேற்று குலசேகரம், பெருஞ்சாணி பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பொதுமக்கள் வசதிக்காக கல்குளம் தாலுகாவை 2ஆக பிரிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதன் விளைவாக திருவட்டார் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் எளிதில் அணுகும் பொருட்டு கல்லடிமாமூடு பகுதியில் புதியதாக தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அங்கு நீதி மன்றம் அமைப்பதற்கும் முயற்சி மேற்கொள்வேன்.குலசேகரம் பஸ் நிலையம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பஸ் நிலையத்தில் எத்தகைய வளர்ச்சி பணிகளும் செய்யப்படாமல் உள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் குலசேகரம் பஸ் நிலையம் சீரமைத்து நவீனப்படுத்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள முதியோர், பென்சன், ஆதரவற்றோர் உதவிதொகை ரூ.1500 ஆக உயர்த்தி வளங்கப்படும்.