தண்டராம்பட்டு, ஏப்.1: தண்டராம்பட்டு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம்- அத்திப்பாடி சாலையில் வசிப்பவர் கோவிந்தன்(55). கூலி வேலை செய்து வந்தார். கூரை வீட்டில் வசித்து வரும் கோவிந்தன் குடும்பத்தினர், தற்போது புதிதாக வீடு கட்டும் பணிக்காக, வீட்டின் கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கோவிந்தன் தனது வீட்டின் அருகே நிழலில் அமர்ந்தார். அப்போது, வீட்டின் சுவர் திடீரென இடிந்து அவர் மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அலறித் துடித்த கோவிந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கோவிந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.