சிவகங்கை, ஏப்.1: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் சோழபுரம் ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.நாமக்கல்லில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மாநில அளவிலான தேர்வு போட்டியில் சிவகங்கை அருகே சோழபுரம் ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி பெண்கள் வாலிபால் அணியினரும், ஆண்கள் வாலிபால் அணியினரும், பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் ஒரு மாணவியும் தமிழ்நாடு அணி சார்பாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த அணியினர் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று ஆண்கள் வாலிபால் போட்டியில் முதல் சுற்றில் கர்நாடகா, காலிறுதியில் கோவா, அரையிறுதி போட்டியில் மகாராஷ்டிரா, இறுதிப்போட்டியில் கேரளா அணியை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.