வாடிப்பட்டி,ஏப்.1: சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.வெங்கடேசனுக்கு தொகுதியில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சோழவந்தான் தொகுதி ரஜினி மக்கள் மன்றத்தினைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞர்கள், மகளிரணியினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.ரஜினி மக்கள் மன்ற வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தீபன், துணை செயலாளர் பரமன், பேரூர் செயலாளர் பட்டைசேகர், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் வாடிப்பட்டி மாதா கோவில் அருகிலிருந்து ரஜினிமன்ற கொடியுடன் பேரணியாக வந்து வாடிப்பட்டி அண்ணா சிலை முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் வீடுவீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.