செய்யூர், மார்ச் 31: வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு வாக்குறுதி அளித்தார். செய்யூர் (தனி) தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு நேற்று லத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள நெற்குணம், நீலமங்கலம், சீவாடி, நெல்வாய், வடக்கு வாயலூர், கல்குளம், தொண்டமநல்லூர், லத்தூர், பச்சம்பாக்கம், திருவாதூர், பவுஞ்சூர், பெரிய வெளிக்காடு ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஏராளமான திமுக உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு, வேட்பாளருக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர். இதில், கலந்து கொண்ட பெண்கள், வேட்பாளர் பனையூர் பாபுவுக்கு ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அங்கு விசிக வேட்பாளர் பனையூர் பாபு பேசியதாவது.
பாலாற்றில் கூடுதல் தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும். முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும், பதநீர் எடுப்பதற்கு அனுமதி பெற்று தரப்படும். அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு 100 மாணவர்களின் கல்வி செலவை தாம் முழுமையாக ஏற்று நடத்துகிறேன். அதேபோன்று தேர்தலில் வெற்றி பெற்றால், செய்யூர் தொகுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பு வரை கல்வி பயில்வதை உறுதி செய்வேன். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. சனாதனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே நடக்கும் போர். சனாதனத்தை எதிர்த்து ஜனநாயகம் வெற்றி பெற பானை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்றார்.தொடர்ந்து செய்யூர் தொகுதியில் உள்ள பவுஞ்சூரில், திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வேட்பாளர் பனையூர் பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், திமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி, ஹேமநாதன், மோகன்ராஜ், ராஜேந்திரன், ஸ்ரீகாந்த், குப்புசாமி, குணசேகரன், சுரேஷ்குமார், பிரபாகரன், சுந்தரமூர்த்தி, வினோத், வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் பார்வேந்தன், விடுதலை செழியன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.