பழநி /திண்டுக்கல், மார்ச் 31: திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நடந்த காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கான தபால் ஓட்டு முகாமில் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப். 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவிற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் அவர்களுக்கான தபால் வாக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு நேற்று தபால் வாக்களிக்கும் முகாம் அந்தந்த தொகுதிகளில் நடந்தது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் 830 பேர் தபால் வாக்கு செலுத்த சீலப்பாடி ஆயுதப்படை மைதான கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. காவலர்கள், ஊர்க்காவல் படையினர் தங்களது அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்ப்பித்த பின்னர் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் தங்களது வாக்கினை செலுத்திய பின் மூடி சீல் வைத்த கவரை வாக்கு பெட்டியில் போட்டனர்.