பரமத்திவேலூர், மார்ச் 31: பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி எம்எல்ஏ பரமத்தி ஒன்றிய பகுதிகளான நடந்தை, சீராப்பள்ளி, குண்ணமலை, சித்தம்பூண்டி, மாணிக்கநத்தம், பிள்ளைக்களத்தூர், பில்லூர், கூட்சேரி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும். கிராமப் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி கூலியையும் அதிகப்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பெண்களுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை, பேருந்து கட்டண சலுகைகள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.