புதுச்சேரி, மார்ச் 30: புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா மறுபடியும் நம்மை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதில் நாம் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை முதலில் நாம் உணர வேண்டும். 90 சதவீத மக்களுக்கு முகக்கவசம் போடுவது பாதுகாப்பை தருகிறது என்று தெரிந்தாலும் கூட 50 சதவீதம் பேர் தான் அதனை கடைபிடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது 406 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.