காரியாபட்டி, மார்ச் 30: காரியாபட்டி கிராமப்பகுதியில் திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்எல்ஏ வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். வெற்றிலைமுருகன்பட்டி, டி.செட்டிகுளம், கம்பாளி, எஸ்.மரைக்குளம், சூரனூர், சித்தனேந்தல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். வல்லப்பன்பட்டியில் அவர் பேசியதாவது: என்னை ஒவ்வொரு வருடமும் மிகுந்த அன்புடன் வரவேற்று வெற்றி பெறச்செய்கிறீர்கள். தாமரைக்குளத்தில் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டிய சாயப்பட்டறையை எதிர்த்து சட்டப்பேரவையில் தொடர்ந்து விவாதித்தேன். மேலும் போராட்டம் நடத்தியும் எதிர்ப்பு தெரிவித்த இயக்கம் திமுக. எனவே, ஒரு சென்ட் இடத்தில் கூட சாயப்பட்டறை வைக்க விடமாட்டேன். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாயப்பட்டறையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் அறவே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.