காஞ்சிபுரம், மார்ச் 24 :பஞ்சபூத தலங்களில் மண் தலமான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவில் அறுபத்து மூவர் உற்சவம் நேற்று கோலகலாமாக நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 18ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் உற்சவர் ஏகாம்பரநாதர் சிறப்பு அலங்காரத்தில் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடா்ந்து, மாலை 6 மணியளவில் உற்சவர் சிம்ம வாகனத்திலும், அம்பிகை கிளி வாகனத்திலும் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். 19ம் தேதி சுவாமி, அம்பிகை இருவரும் சூரியப்பிரபையிலும், மாலை சுவாமி சந்திரப் பிரபையிலும் அம்பிகை அன்ன வாகனத்திலும், 20ம் தேதி காலை வெள்ளி பூத வாகனத்திலும், 21ம் தேதி காலை நாக வாகனத்திலும், மாலை வெள்ளி இடப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தனர். மார்ச் 22 ஆம் தேதி பிரபல உற்சவமான வெள்ளி அதிகார நந்தி சேவையிலும், மாலை ஸ்ரீ கைலாசபீட இராவண வாகனம் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.