குடிநீருடன் கழிவுநீர் கலப்பு தூத்துக்குடியில் பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடி, மார்ச் 24: தூத்துக்குடியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி போல்டன்புரம், ராமசாமிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. நேற்றும் வழக்கம்போல் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு புதுக்கிராமம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து தென்பாகம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: