திருப்பூர், மார்ச் 23: பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். அவர் நேற்று பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் ஒன்றியம், மாதப்பூர், சமத்துவபுரம், கிருஷ்ணாபுரம், சிங்கனுர், உகாயனூர், சிவசக்தி நகர், பொல்லிக்காளிப்பாளையம், ஆணடிப்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன், திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசியதாவது: கடந்த 2011ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.ஆட்சி தொடர்ந்து நடந்து வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஏழை, எளிய மக்களுக்காக பலவேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துளளார். உங்கள் பகுதிகளுக்கு தேவையான திட்டங்களையும், நீங்கள் வைத்த கோரிக்கைகளையும், அதிமுக எம்.எல்.,ஏ.க்களாக இருந்த பரமசிவம், கரைப்புத்தூர் நடராஜன் ஆகியோர் நிறைவேற்றி தந்துள்ளனர்.
அதேபோல் பல்லடம், பொங்கலூர் பகுதியில் ஆனைமலை-நல்லாறு திட்டம். அந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது குறித்து முதல்வர் செயல் வடிவம் கொடுத்து வருகிறார். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதி அளித்துள்ளார். விவசாயிகளுக்கு தண்ணீர் பஞ்சம் இல்லை என்ற நிலை வரும். ஆகவே, நீங்கள் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை பெற்றுத்தர வேண்டும். நீங்கள் வைக்கும் கோரிக்கையையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன். இவ்வாறு அவர் பேசினார்.