கரூர், மார்ச்23: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் புகளூரில் கடந்த மாதம் அரசால், கதவணை கட்டும் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே புகளூரில் கட்டப்பட இருக்கும் கதவணையில், கதவணை கட்டப்படும் இடத்திற்கு முன்புறமாக 10 கிமீ தொலைவில் சேமங்கி அருகே காவிரி ஆற்றில் நொய்யல் ஆறு கலக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி தடையின்றி 2ஆயிரம் டிடிஎஸ் முதல் 16ஆயிரம் டிடிஎஸ் உப்புத்தன்மையுடன் ஆண்டு முழுவதும் வந்து கொண்டுள்ள கழிவு நீரால், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணை வரும் காலத்தில் முழுக்க நிரப்பபட இருக்கிறது.