திருப்போரூர் அருகே பரபரப்பு தலையில் கல்லைப் போட்டு இளம்பெண் படுகொலை

திருப்போரூர், மார்ச் 18: திருப்போரூரில் இருந்து மாம்பாக்கம் செல்லும் வழியில் காயார் அருகே ஈச்சங்காடு வனப்பகுதி உள்ளது. இங்குள்ள பிரதான சாலையையொட்டி, ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, காயார் எஸ்ஐ ஆனந்தஜோதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, தனியார் துணிக்கடை ஒன்றின் சீருடை அணிந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தலையில் கல்லைபோட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் மது பாட்டில்கள் கிடந்தன. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், இளம்பெண் அணிந்து இருந்த சீருடையை வைத்து விசாரித்தனர். அதில், சென்னை மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்திரா (30).

வேளச்சேரியில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்தார். இவரது கணவர் மணி என தெரிந்தது. மேலும் விசாரணையில், கடந்த ஒரு ஆண்டாக, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மணியை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து சடலத்தை அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர் வந்து சடலமாக கிடப்பது, தனது மனைவி சந்திரா என உறுதி செய்தார். பின்னர், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக  1 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்ததால், அவர் போலீசில் புகார் கொடுக்க மறுத்து விட்டார்.  இதையடுத்து, காயார் விஏஓ முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரா  வனப்பகுதிக்கு எப்படி வந்தார், அவரை கொலை செய்தது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: