திருவாரூர், மார்ச் 18: திருவாரூரில் கஜா புயலின்போது சேதமடைந்து, விரிசல் விழுந்த உழவர் சந்தை கட்டிடம் இது வரையில் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனை சீரமைத்து தர வேண்டும் என சிறு, குறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் நெல் விவசாயிகள் அல்லாத பிற விவசாயிகள் பயனடையும் வகையில் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது உழவர் சந்தை திட்டமானது தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டது. அதன்படி இந்த உன்னதமான திட்டத்தில் விவசாயிகள் பலரும் தங்களது காய்கறிகள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில் அதன் பின்னர் ஏற்பட்ட அதிமுக ஆட்சியின்போது இந்த உழவர் சந்தைகளுக்கு மூடுவிழா காணப்பட்டது. இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட ஒரு சில உழவர் சந்தைகள் மட்டும் தற்போது வரையில் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும் திருவாரூரில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒட்டியவாறு இந்த உழவர் சந்தையானது இயங்கி வந்தநிலையில் இதில் மொத்தமுள்ள 39 கடைகளில் ஆவின் பாலகம் ஒன்று. பூக்கடை ஒன்று என 2 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வந்தன. மேலும் இதற்கான கட்டிடம் கட்டப்பட்டதிலிருந்து தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் இதில் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக இந்த உழவர் சந்தையில் இருந்து வரும் கடைகளின் மேற்கூரையானது சேதமடைந்தது மட்டுமின்றி கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.