பட்டுக்கோட்டையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

பட்டுக்கோட்டை, மார்ச் 18: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை பட்டுக்கோட்டை சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலச்சந்தரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அழகிரி சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார். அவருடன் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதிபாலசுப்ரமணியன், மதுக்கூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் இளங்கோ, வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர். பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜன் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தரிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சேகர், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளர் வழக்கறிஞர் முரளிகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் புலவஞ்சி கிராமத்தை சேர்ந்த கீர்த்திகா அன்பு நேற்று மாட்டு வண்டிகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலச்சந்தரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Related Stories: