கர்நாடகா பொய் சொல்லி வருவதை கைவிட வேண்டும்; தமிழ்நாடு அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது: குடியாத்தத்தில் தமிழிசை பேட்டி

 

குடியாத்தம், ஆக. 4: தமிழ்நாடு அனுமதியில்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என குடியாத்தத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள யோகா மற்றும் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொள்ள நேற்று பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிச்சயமாக மீட்டெடுக்க வேண்டும். ஏப்ரல் மாதமே கர்நாடகா மேகதாது அணை கட்டுவது தொடர்பாக அளித்த திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

ஆனால் இதனை ஏதோ பாஜக எதிர்க்கவில்லை என்பது போலவும், கர்நாடகாவிற்கு சாதகமாக செயல்படுவதாகவும் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியின் அனுமதியில்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு வறண்டு போய்விடும். தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் அணையில் தண்ணீர் இல்லை என்கிறார்கள். மழை வந்ததும் வெள்ளம் வரும் என திறந்து விடுகிறார்கள். அப்படியானால் ஏற்கனவே தண்ணீர் இருந்துள்ளது என்றுதான் அர்த்தம். கர்நாடகா தொடர்ந்து பொய் சொல்லி வருவதை கைவிட வேண்டும். தவெக அரசு மக்களை ஏமாற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 200 யூனிட் மின்சாரம், 6 காஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச பயணம் எல்லாமே பேப்பரில் தான் உள்ளது.

நேற்று கூட என் வீட்டில் 2 மணி நேரம் மின்சாரம் இல்லை. மின்துறை அமைச்சர் சரியாக விசாரித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும். காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்ததை வரவேற்கிறேன். ஆனால் ஆட்சியும் காமராஜரை போல நடத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவும், ஊழலை ஒழிக்கவும், வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரவும் காமராஜர் ஆட்சி போல நடக்க வேண்டும். காவிரிக்காக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என பாஜக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். காலம் தாழ்த்தக்கூடாது. மழைக்காக காத்திருக்க முடியாது. நியாயமான நீரை உறுதி செய்ய வேண்டும். வந்தே மாதரம், வழிபாட்டு முறை என எதுவாக இருந்தாலும் பெரும்பான்மை இந்துக்கள் பாதிக்கப்படுவதை ஒத்துக்கொள்ள முடியாது. திருப்பரங்குன்றத்தில் என்ன செய்தீர்கள்?, இந்து மதத்தை தொடர்ந்து நிந்தித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: