வேலூர், ஆக. 3: வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 6 மாதங்களில், போட்டி தேர்வு நூல்களை தேடி ஒரு லட்சம் வாசகர்கள் வந்துள்ளனர். மாணவர்களின் வசதிக்காக இலவச வைபை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நூலகம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர். அசுர வளர்ச்சி பெற்ற அறிவியில் தொழில்நுட்ப காலத்தில், அனைத்தும் கையடக்க கருவியில் கிடைத்தாலும், நூல்களை தொட்டு உணர்ந்து அதனை வாசிக்கும் உணர்வு ஆன்லைனில் கிடைக்காது. எனவே நூலகங்களை தேடி செல்வோர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், நூல்களை வாசிக்கும் பழக்கம் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்து புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை ஆர்வமுடன் வாசித்து வருகின்றனர். போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நூலகத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாவட்ட நூலகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. டிஎன்பிஎஸ்சி, ரயில்வே, வங்கி, யூபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வு, தமிழ் இலக்கியம், கண்டுபிடிப்பு, அறிவியல் உள்ளிட்ட சிறப்பு புத்தகங்கள் மற்றும் நூலகத்தில் பல்வேறு நாளிதழ்கள், இதழ்கள் வாசகர்களின் பயன்பாட்டிற்காக உள்ளன. இதுவரை வாசிப்பு பழக்கத்தால் கடந்த 6 மாதங்களில் ஒரு லட்சம் வாசகர்கள் நூலகளை தேடி வந்து பயனடைந்துள்ளனர்.
தினமும் போட்டி தேர்வு படிப்பதற்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர். இந்த மாணவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி இருந்து படித்து பயனடைகின்றனர். அவர்களுக்கு சென்னையில் இருந்து போட்டித் தேர்வு எமுதுவதற்கு ஆன்லைன் மூலம் ஒரு வகுப்புகள் நடக்கிறது. இதற்காக பிரத்யேக கணினி வசதிகளும் உள்ளன. மாணவர்கள் பயன்படுத்த இலவச வைபை வசதிகளும் உள்ளன. இந்த நூலகத்தில் படித்த ஏராளமான வாசகர்களின் மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் நூலகங்களை தேடி 1 லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் வந்து பயன்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து நூலக அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து பல்வேறு போட்டி தேர்வு நூல்கள், நாளிதழ்களை படித்து விட்டு செல்கின்றனர். வெள்ளிக்கிழமை மாணவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் படிப்பதற்கு தனி இட வசதியும் உள்ளது. இங்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு புத்தகங்கள் உள்ளன. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றனர்.
