வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் 2வது நாள் வேலை நிறுத்தத்தால் ₹500 கோடி பணபரிவர்த்தனை முடங்கியது பொதுமக்கள் கடும் அவதி வேலூர், மார்ச் 17: வேலூர், திருப்பத்தூர்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றும் வங்கி ஸ்டிரைக் காரணமாக ₹500 கோடி பணபரிவர்த்தனை முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பொதுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 வங்கிகள், ஒரு இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றை மத்திய அரசு தற்போது தனியாரிடம் வழங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சில வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினமும், நேற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றும் மொத்தம் 240 வங்கிகள் இந்த வேலை நிறுத்தம் போராட்டத்தில் பங்கேற்று உள்ளது. இந்த வங்கிகளில் பணியாற்றும் 2,700 ஊழியர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்து உள்ளனர். இதனால் பணபரிவர்த்தனை அடியோடு முடங்கி உள்ளது. இரண்டு நாட்களுக்கு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும். அதேபோல நெட்பேங்கிங், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இரண்டு நாட்களாக வேலை நிறுத்தம் காரணமாக ₹500 கோடிக்கு பண பரிவர்த்தனை முடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories: