தக்கலை, மார்ச் 16: குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. கடந்த 12ம்தேதி இதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. முதல் நாள் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் சுயேட்சை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மற்ற தொகுதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை. முக்கிய அரசியல் கட்சியினர் நேற்று (15ம்தேதி) வேட்பு தாக்கல் செய்தனர். பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் தக்கலையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஊர்வலமாக வந்தார். பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஊர்வலத்தில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். வேட்பாளர் மனோதங்கராஜ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வேட்பு மனுவை சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் தாக்கல் செய்தார்.