நாகர்கோவில், மார்ச் 15: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 9 வது முறையாக போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, முதல் முறையாக வசந்தகுமார் மகனும், நடிகருமான விஜய் வசந்த் களமிறங்கி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பா.ஜ. சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் 9வது முறையாக களமிறங்கி உள்ளார். தந்தை விட்டு சென்ற பணிகளை நிச்சயம் தொடருவேன் என விஜய் வசந்த் உறுதி அளித்துள்ளார். விஜய் வசந்த் அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் நேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் இன்ஜினியர் அலெக்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.