சோமங்கலம் அருகே வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை: போலீசில் 2 பேர் சரண்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், அதே பகுதியில் ஒரு கறிக்கடையில் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தங்கம், ஆனந்தஜோதி ஆகிய இருவரும் நேற்றிரவு காரில் வந்து, ராஜேஷை மது அருந்துவதற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் நள்ளிரவு வரை ராஜேஷ் வீடு திரும்பாததால், அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் உறவினர்களும் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜேஷுடன் நேற்றிரவு மது அருந்த சென்றிருந்த தங்கம், ஆனந்தஜோதி ஆகிய 2 பேரும் இன்று காலை சோமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர், நாங்கள் இருவரும் நேற்றிரவு மதுபோதையில் ராஜேஷை சரமாரி தாக்கி கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் 2 பேரும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். இத்தகவலின்படி, சேத்துப்பட்டு-சோமங்கலம் சாலையை ஒட்டிய பகுதியில் ராஜேஷ் உள்பட 3 பேரும் மது அருந்திய இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு முகம் சிதைந்த நிலையில் கிடந்த ராஜேஷின் சடலத்தை சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப்பதிவு செய்து, சரணடைந்த 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், நேற்றிரவு மதுபோதையில் இருந்த ராஜேஷ், தங்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதில் ஆத்திரமான தங்கம், ஆனந்தஜோதி ஆகிய இருவரும் சேர்ந்து ராஜேஷை கற்கள் மற்றும் இரும்பு கம்பியால் சரமாரி தாக்கி, முகத்தை சிதைத்து கொலை செய்ததாக போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரிடமும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: