கீழ்வேளூர், மார்ச் 14: கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்காக 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. கீழ்வேளூர் தொகுதியில் கடந்த தேர்தலில் 203 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது தேர்தல் ஆணையம் உத்தரவின்படி கூடுதலாக 48 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்த 251 வாக்குச்சாவடிகள் ஆகும். இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளுக்கு மொத்தம் 302 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாடு இயந்திரங்கள், 332 ஒப்புகை வாக்கு சீட்டு சரி பார்க்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. அங்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்து மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் தனி அறையில் பாதுகாப்பாக வைத்து வருவாய்துறையினர் மூடி சீல் வைத்தனர். இங்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.