திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். சிறுத்தையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். திருப்பதி மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் நலன் கருதி, பகல் நேரங்களில் மட்டுமே மலையேறவேண்டும், பக்தர்கள் கும்பலாக சேர்ந்து மலையேறவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள், வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக நேற்று நள்ளிரவு பக்தர்கள் மலையேறினர். லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சென்றபோது, திடீரென மலைப்பாதையில் சிறுத்தை வந்துள்ளது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், கட்டைகளை கொண்டு சத்தம் எழுப்பி சிறுத்தையை விரட்டினர்.

பின்னர் வனத்துறை ஊழியர்கள், மலைப்பாதையில் பக்தர்கள் குழுக்களாக செல்லவேண்டும். தனியாக செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
திருப்பதி உபாத்யாய நகரில் இரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இதனால் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பேனர் வைத்து, இரவில் தனியாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: