டெல்லி: ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயிலை பிரதமர் மோடி வரும் ஜூலை 17ம் தேதி தொடங்கி வைக்கிறார். கடந்த மாதம், தேசிய போக்குவரத்து அமைப்பான ரயில்வே, அவசரகால பிரேக்கிங் தூரம் மற்றும் ஊசலாட்ட சோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பு மதிப்பீடுகளில் கவனம் செலுத்தி, அதன் செயல்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை மதிப்பிடுவதற்கான ரயிலின் இறுதி சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது. கிரீன் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் மிஷன் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ரயில் கொண்டுவரப்படுகிறது.
ஹரியானாவில் ஜூலை 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து ரயிலை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்த நிலையில், 89 கி.மீ நீளமுள்ள ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் முதல்கட்டமாக இயக்கப்பட உள்ளது. இதில் நான்கு முதல் ஐந்து ரயில் நிலையங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் டிக்கெட் விலை ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
