நாமக்கல், ஜூன் 26: நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலனிடம், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஏரிகளில் இருந்து விவசாயிகளும், மண்பாண்டம் செய்வோரும், அனுமதி பெற்று இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அனைத்து விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள செட்டிக்குளம் ஏரியில் இருந்து, வண்டல் மண் எடுக்க, ஒரு சில நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் முற்றிலும் புறக்கணித்து பாரபட்சம் காட்டுவதாகவும் தெரியவருகிறது.
பொதுமக்களின் சொத்தாக உள்ள ஏரியில் இருந்து அகற்றப்படும் வண்டல் மண்ணை, சிலருக்கு மட்டுமே வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது. இதுகுறித்து கலெக்டர் நேரடி விசாரணை மேற்கொண்டு, உண்மை நிலையை கண்டறிந்து, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வண்டல் மண் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
