திருப்பூர், ஜூன் 18: திருப்பூர் மாநகர் பகுதியில் பல இடங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்து அதில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. இந்நிலையில், இவை வழக்கமாக காலை 6 மணிக்கு ஆப் செய்யப்படும். ஆனால், திருப்பூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் பகலிலும் எரிந்து வருவது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று கோட்டை மாரியம்மன் கோயில் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பல இடங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. ஆனால், தேவையற்ற வகையில் பகலில் எரிந்து கொண்டிருக்கிறது என வாகன ஓட்டிகள் முனுமுனுத்தபடி சென்றனர்.
