விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டி செஞ்சி தொகுதி பாமக எம்எல்ஏ கணேஷ்குமார், சிலரை பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இதேபோல் தவெகவினரும் பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பள்ளிக்கு சென்ற தவெக மாவட்ட செயலாளர் குணசரவணன் தலைமை ஆசிரியரிடம் சென்று நாங்கள்தான் ஆளும் கட்சி நாங்கள் சொல்பவரை தான் நீங்கள் நியமன செய்ய வேண்டும் என்று கூறினாராம்.
இது எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட பாமகவினர் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள தவெக மாவட்ட செயலாளர் அலுவலகம் முன் திரண்டனர். அவர்கள் இவ்விவகாரம் குறித்து தவெக மாவட்ட செயலாளரிடம் கேட்டுள்ளனர். அப்போது பாமகவினர் இத்தொகுதிக்கு நாங்கள்தான் சட்டமன்ற உறுப்பினர் நாங்கள் தான் பரிந்துரை செய்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
