‘எனக்கு நீதி கிடைக்கவில்லை நான் சாகப் போறேன்’ – காவல்துறையை கண்டித்து விவசாயக் கூலி தொழிலாளி தற்கொலை முயற்சி

 

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் காலனித்தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் முருகையன் மகன் நாகராஜன்(46). விவசாயக் கூலி தொழிலாளியான இவரை சென்ற மாதம் 21.05.2026 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் மாதவன் என்பவர் வழிமறித்து சாதிப் பெயரை குறிப்பிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நாகராஜன் புகார் கொடுத்துள்ளார். போலீசார் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கூலி தொழிலாளி நாகராஜன் உயர் அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார்.

அதன் பின்னர் காவல் நிலையத்தில் விசாரித்த போலீசார் சமாதானமாக போகும்படி கூறி பேசியதாக கூறப்படுகிறது, ஆனாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நாகராஜன் கூறியுள்ளார். ஆனால் அப்போதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நாகராஜன் இன்று மாலை முத்துப்பேட்டை காவல் நிலையம் வந்து அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரனிடம் எனது புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு வழக்கம் போல அவர் பதில் கூறியதால் ஆத்திரம் அடைந்த நாகராஜன் சத்தமிட்ட வாரு போலீசாரிடம் வாக்குவாதம் செய்து உள்ளார்.

அதனை தொடர்ந்து ‘எனக்கு நீதி கிடைக்கவில்லை நான் சாகப் போறேன்’ என கூறிவிட்டு காவல் நிலையம் வாசலுக்கு வந்த நாகராஜன் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரன் மற்றும் போலீசார் அங்கு நின்ற மக்கள் அவரை தடுத்து நிறுத்தி உடன் உடலில் தண்ணீர் ஊற்றி முதலுதவி செய்தனர். அதனை தொடர்ந்து தீ குளிக்க முயற்சி செய்த நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: