ராஜபாளையம்: ராஜபாளையம் தேவதானம் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகன் வின்சென்ட் (45). இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது, வின்சென்ட் விளையாட்டாக ஒருவரது கைலியை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த நபர், வீட்டுக்கு சென்று தனது தம்பி ஆனந்தகுமாரிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஆனந்தகுமார், தனது நண்பர் கோவர்த்தனன் என்ற சூரியன் என்பவருடன் டூவீலரில் அன்று இரவு வின்சென்ட் வீட்டிற்கு வந்தார். அங்கு இருவரும் சேர்ந்து வின்சென்ட் உடன் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் வின்சென்ட் உயிரிழந்தார்.
