சென்னை: எழும்பூர் எத்திராஜ் சாலையை சேர்ந்தவர் சபியா(43). தொழிலதிபரான இவர், கடந்த 2022ம் ஆண்டு பாண்டி பஜாரில் புதிதாக தொடங்கப்பட்ட சென்னை கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்தார். அப்போது கடையின் உரிமையாளர் பிஜோ ஜோஸ்(43) பழக்கமானார். இந்த பழக்கத்தில் சபியா, புது வீடு வாங்க பணம் தேவைப்பட்டததால், தன்னிடம் இருந்த 250 சவரன் நகைகளை பிஜோ ஜோஸிடம் கொடுத்து, குறைந்து வட்டியில் அடகு வைத்து பணம் பெற்று தருமாறு கொடுத்துள்ளார்.
நகைகளை பெற்றுக்கொண்ட பிஜோ ஜோஸ் அடகு வைப்பதாக கூறி சபியாவை ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சபியா, தான் கொடுத்த நகைகளை திரும்ப கேட்டபோது, நகைக்கடையை மூடிவிட்டு பிஜோ ஜோஸ் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சபியா சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு ெசய்து கடந்த 3 ஆண்டுகளாக பிஜோ ஜோஸுவை தேடி வந்தனர். இதற்கிடையே பிஜோ ஜோஸ் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கல்வாரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.
அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா மாநிலம் சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் பிஜோ ஜோஸ்வை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது கடைக்கு வரும் வசதியான நபர்களிடம் குறைந்த வட்டியில் பணம் பெற்று தருவதாக பலரிடம் நகைகள் பெற்றுக்கொண்டு கடையை பூட்டிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. மேலும், கைது ெசய்யப்பட்ட பிஜோ ஜோஸிடம் நகைகளை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
