சென்னை:தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதேநேரம், ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 105 டிகிரி வெயில்
அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை விமான நிலைய பகுதியில் 105 டிகிரி வெப்பம் சுட்டெரித்தது.
