புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு பத்திரிகையாளர், அரசியல் ஆய்வாளர் உள்பட 3 செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், படித்த வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலை கழகத்தில் உயர் கல்வி பயின்று வரும் அபிஜித் தீப்கே என்பவர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற சமூக ஊடக கட்சியை கடந்த மாதம் தொடங்கினார்.
இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி 3 செய்தி தொடர்பாளர்களை நியமித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சமூக வலைதளத்தில், “கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராக புலனாய்வு செய்தியாளர் சவுரவ் தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். அரசியல் ஆய்வாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான விஜேதா தஹியா மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெக்கன்சி நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
