புதுடெல்லி: சிபிஎஸ்இ-யின் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் முறைகேடு தொடர்பான சர்ச்சையையொட்டி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,’ ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு ஊழல் நிறைந்த, திறமையற்ற மற்றும் இரக்கமற்ற கல்வி அமைச்சகத்தை நடத்தி வருகிறார். சிபிஎஸ்இயின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் மாற்றப்பட்டு இருக்கலாம்.
ஆனால் தனது அமைச்சகத்தின் திறமையின்மை, ஊழலுக்கான ஆதாரங்கள் குவிந்து வரும் நிலையிலும் அமைச்சர் பிரதான் வெட்கமின்றி தனது பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார். இந்த ஒப்பந்தத்தில் நடந்த ஊழலை முதன்முதலில் சுட்டிக்காட்டிய 18வயது மாணவர் சார்த்தக் சித்தாந்த் அளித்த விளக்கத்தை கேட்ட பிறகே அந்த குழு இந்த கேள்விகளை எழுப்பியிருந்தது. சிபிஎஸ்இயின் ஒஎஸ்எம் முறைக்கான முன்னோட்டப் பயிற்சியில் பங்கேற்ற பலர் இந்த அமைப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி எச்சரித்ததாக ஆங்கில நாளிதழ் விசாரணை வெளிப்படுத்தி உள்ளது.
ஒஎஸ்எம் முறையை தள்ளிப்போட வேண்டும் என்ற அந்த அறிவுறுத்தலை செவிமடுப்பதற்கு தவறியது மட்டுமல்லாமல் பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டிய பல குறிப்பிட்ட சிக்கல்களை தீர்க்கவும் சிபிஎஸ்இ தவறிவிட்டது. இதனால் 18 லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் வாழ்க்கையில் சிபிஎஸ்இ விளையாடி விட்டது. தற்போது மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான தனது சொந்தக் காலக்கெடுவை நிறைவேற்றுவதில் சிபிஎஸ்இ தொடர்ந்து தவறி வருகின்றது. பிரதமர் ஏன் அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாதுகாப்பதில் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்? இதுவரை அவர் பதவியில் நீடிப்பதற்கு யாருடைய ஆதரவு காரணமாக அமைந்தது?” என்று குறிப்பிட்டுள்ளார்.
