புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஒடிசா மாநிலத்தில் ராமேஸ்வர் முதல் பாராதீப் வரை 160.18 கிமீ தூரத்திற்கு ரூ.8,300.79 கோடி செலவில் புதிய கடலோர நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சாலை குர்தா, பூரி, கேந்திரபாரா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும் என்றும் இத்திட்டம் நிறைவடைந்ததும் ராமேஸ்வர்-பாராதீப் இடையேயான பயண நேரம் சுமார் 2.30 மணி நேரம் குறையும் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மத்திய பிரதேசத்தில் ரூ.4,415.60 கோடி மதிப்பில் 2 சாலைத் திட்டங்களுக்கும், தெலங்கானாவில் ரூ.7,597.16 கோடி மதிப்பில் 190 கிமீ தொலைவுக்கு 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்திற்கும், பீகாரில் ரூ.3,936.05 கோடி மதிப்பில் 2 தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழிச் சாலையாக மேம்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதவிர, டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள பழைய சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளை மாற்றுவதற்கு நிதி உதவி வழங்கும் ரூ.9,585 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. . இத்திட்டத்தின் கீழ், பிஎஸ்-4 அல்லது அதற்கும் முந்தைய மாசு ஏற்படுத்தும் லாரிகள் மற்றும் பேருந்துகளை, கடுமையான உமிழ்வு விதிமுறைகளைக் கொண்ட பிஎஸ்-6 அல்லது எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வாகன கடன்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 5 சதவீத வட்டி மானியத்தை ஒன்றிய அரசு வழங்கும். மேலும் வாகன வகையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு ரூ.4,800 வரையிலான எரிபொருள் வவுச்சர்கள், மின்சார வாகனங்களை வாங்குவதற்கான மொத்த தொகை சலுகைகள் உள்ளிட்ட பல்னகள் வழங்கப்படும்.
விமான எரிபொருள் விலை ரூ.10,000 கோடியில் திட்டம்;
மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியால் விண்ணை முட்டும் எரிபொருள் செலவுகளில் இருந்து விமான நிறுவனங்களை பாதுகாக்க ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான விமான டர்பைன் எரிபொருள் விலை கட்டுப்படுத்துதல் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது, விமான போக்குவரத்து இணைப்பை பாதுகாப்பதையும், விமான கட்டணங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டது. இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரையிலான வட்டி இல்லாத முன்பணம் வழங்கப்படும். சர்வதேச விமான எரிபொருள் விலை மார்ச் மாதத்தில் லிட்டருக்கு ரூ.60.50ல் இருந்து மே மாதத்தில் ரூ.142 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
