நாகர்கோவில், மார்ச் 5: கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்லையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க குமரி மாவட்டத்தில் 18 பறக்கும்படைகள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. இந்த குழுவினர் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படுகின்ற பணம், பரிசு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
குளச்சல் தொகுதியில் மரிய ஸ்டெல்லா தலைமையிலான பறக்கும்படை குழுவினர் ஆலஞ்சி சந்திப்பில் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட மீன் லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த நவ்பல் என்பவரிடம் இருந்து ₹1.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை போன்று பறக்கும்படை அதிகாரி இக்னேஷியஸ் சேவியர் தலைமையில் குளச்சல் பகுதியில் நடத்திய சோதனையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் ஓட்டி வந்த மினி கண்டெய்னர் லாரியில் ஆவணங்கள் ஏதும் இல்லாது கொண்டுவரப்பட்ட ₹3 லட்சத்து 44 ஆயிரத்த 740ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.