வாக்களிக்க பணம், பொருள் பெறுவதை தவிர்க்க வேண்டும்

திருவாரூர், மார்ச் 5: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களது வாக்குகளுக்காக ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பெறுவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பு நடைபெறுவது தொடர்பாக செய்தித் துறையின் மூலம் மின்னணு திரை மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தா துவக்கி வைத்து தேர்தல் தொடர்பான கையேடுகளை வெளியிட்டார்.

மேலும் மகளிர் திட்டம் சார்பில் வண்ணக்கோலங்கள் மூலம் நூறு சதவீத வாக்கு பதிவினை வலியுறுத்தி போடப்பட்டிருந்த கோலங்களையும் கலெக்டர் சாந்தா பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பு நடைபெற வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமையாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குகளுக்காக பொதுமக்கள் பரிசுப்பொருட்களையோ அல்லது பணமோ பெறுவதை தவிர்க்க வேண்டும். வாக்குப்பதிவு நாளின்போது தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து சிறந்த ஜனநாயகம் உருவாக வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ பொன்னம்மாள், தேர்தல் தாசில்தார் திருமால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: