திருவண்ணாமலையில் வீடுகள், விடுதிகளில் எஸ்பி சுதாகர் எச்சரிக்கை

திருவண்ணாமலை, ஜூன் 2: விடுதிகளில் தங்கும் வெளி நாட்டினர் விபரங்களை தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சுதாகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 2 ஆயிரம் வெளிநாட்டினர் வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் ஆன்மிகத்தை நாடி வருகின்றனர். அவ்வாறு வரும் வெளிநாட்டவர்களை உள்ளுர்வாசிகள் தங்கள் குடியிருப்புகளில் தங்க வைக்க வேண்டுமெனில், காவல் துறையிடமிருந்து அனுமதி பெற்ற படிவத்தில் (சி பார்ம்) வெளிநாட்டவர்களின் தகவலை பதிவேற்றிவிட்டு பின்பு தங்க வைக்க வேண்டும்.

அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள், வீடுகளில் ஏற்கெனவே முறையாக சி பார்ம் அனுமதி பெற்று வெளிநாட்டவர்களை தங்குவதற்கு இடமளித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டினர் பலருக்கு வீடுகளிலோ, தங்கும் விடுதிகளிலோ அல்லது அகதிகள் முகாம்களிலோ காவல்துறையிடம் எவ்வித தகவலும், அனுமதியும் இல்லாமல் மாவட்டத்தில் உள்ளவர்கள் வாடகைக்கு விடுவதாக புகார்கள் வருகின்றன.

குறிப்பாக, திருவண்ணாமலை நகரப் பகுதி மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள வீடு மற்றும் விடுதி உரிமையாளர்கள் தங்களது குடியிருப்புகளில் அனுமதி பெறாமலும், போதிய பாதுகாப்பின்றியும் வெளிநாட்டவரை தங்க வைத்து வருகின்றனர்.
அதனால், வெளிநாட்டவர் எங்கே தங்கியுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல் தெரியாமல் போவதால், அவர்களின் விசா நீடிப்பு, விசா மாற்றம், இதர சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, வெளிநாட்டவர்களை தங்குவதற்கு அனுமதி அளித்த 24 மணி நேரத்தில் அந்த நபர் குறித்த அடிப்படை விவரங்களை ஆன்லைன் மூலம் (சி பார்ம்) பதிவு செய்ய வேண்டும். தகவல் பதிவு செய்யாமல் அல்லது வேறு முகவரியில் எடுத்த படிவங்களை வைத்து வெளிநாட்டவர்களுக்கு தங்க இடமளித்தால், சம்பந்தப்பட்ட தங்குமிடத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டணை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். எனவே, வெளிநாட்டவரை தங்களது வீடு, தங்கும் விடுதி, ஆசிரமம், மருத்துவமனை, பள்ளி அல்லது கல்லூரி போன்ற வளாகங்களில் தங்க வைப்பதற்காக, பிரத்யேக இணையதள முகவரியின் பயனாளர் அடையாள எண் மற்றும் அதற்கான வழிமுறைகளை திருவண்ணாமலை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: