அறந்தாங்கி, மே 28: அறந்தாங்கி அருகே 7 அடி நீளமுள்ள பாம்பு வீட்டின் கதவில் தோரணம்போல் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் பகுதியில் முகமது சாதிக் என்பவரின் வீட்டின் முன் நேற்று அதிகாலை வீட்டின் கதவின் மேற்பகுதியில் சுமார் 7 அடிக்கு மேல் நீளமுள்ள பாம்பு ஒன்று தோரணம் போன்று சுருண்டு கிடந்தது உள்ளது. இதை வீட்டின் எதிரே வசித்து வரும் பொதுமக்கள் கதவின் மீது பாம்பு கிடப்பதை கண்டு உடனடியாக வீட்டில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு வெளியே வந்து பார்த்த குடும்பத்தினர் கதவின் மீது நீளமான பாம்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பாம்பு வீட்டின் கதவிலிருந்து இறங்கி அருகிலிருந்த புதர் பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
