கூடலூர், மே 28: மேலக்கூடலூர் வீரனத்தேவர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (66). இவர் தனது மகன் பிரபு என்பவருடன் வசித்து வந்தார். தீராத நோயால் பாண்டியன் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தி அடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் காலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டிற்கு வெளியே வந்த முதியவர் பாண்டியன் மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாண்டியனை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
