குத்தாலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த மன்மதீஸ்வரர் கோயில் இடம் மீட்பு கடைவீதியில் பரபரப்பு

குத்தாலம், மே 28: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மன்மதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான வணிக பிரிவு மனை 3,875 சதுரடி இடத்தினை கண்ணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இதில் கண்ணன் இடத்தினை காலிசெய்ய இணை ஆணையர் நீதிமன்றம் 2017ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2025ம் ஆண்டு விசாரணைக்கு வந்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனையடுத்து ஆக்கிரப்பு செய்து இனிப்பக கடை நடத்தி வந்த அந்த இடத்தினை நேற்று மயிலாடுதுறை அறநிலையத்துறை துணை ஆணையர் ரவிச்சந்திரன், கோயில் செயல்அலுவலர் சங்கீதா மற்றும் குத்தாலம் காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்து மீட்டனர். அதன் பின்னர் அறநிலையத்துறையின் மன்மதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடம் என்று விளம்பர பலகை வைத்து சென்றனர். இதனால் குத்தாலம் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: