சில்வார்பட்டியில் ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா?

தேவதானப்பட்டி, மே 26: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் ஓடையின் குறுக்கே கிடப்பில் போடப்பட்ட பாலத்தை விரைந்து கட்டி முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில்வார்பட்டியில் கிழக்கு பகுதியில் வேட்டுவன்குளம் கண்மாயிக்கு செல்லும் பெரிய ஓடை உள்ளது. இந்த பெரிய ஓடையை கடந்து கிழக்குவெளி பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைந்த பொருட்களை கொண்டு வரவும் இந்த ஓடையை கடந்து செல்ல வேண்டும். பருவமழை காலங்களில் மழை பெய்து பெரிய ஓடையில் தண்ணீர் செல்லும் ஓடையை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பெரிய ஓடையின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் சில்வார்பட்டி பெரிய ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் தோண்டப்பட்டு ஆறு மாதம் காலம் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் பள்ளம் தோண்டிய இடத்தில் பில்லர் போடப்பட்டது.

பில்லர் போடப்பட்டு தற்போது பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்ட பணி ஆரம்பிக்கப்பட்டு தற்பாது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சில்வார்பட்டி பெரிய ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணியினை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என சில்வார்பட்டி கிழக்குவெளி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: