பெண் காவலர் வீட்டில் கைவரிசை

 

திருச்சுழி, மே 20: திருச்சுழி அருகே நரிக்குடியைச் சேர்ந்தவர் கோபி(46). நரிக்குடி வட்டார தொடக்க கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயா (40), அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர், காவலர் விஜயாவின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடம், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. அவரும் தண்ணீர் எடுத்து வர வீட்டிற்குள் சென்றுள்ளார்.

கோபி தனது செல்போனையும், மோட்டார் சைக்கிளின் சாவியையும் வீட்டிற்கு வெளிபகுதியில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது செல்போன் மற்றும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்கு தண்ணீர் கேட்டு வந்த மர்மநபர், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து காவலரான விஜயா, நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: