திருவள்ளூர் அருகே காக்களூரில் மின்சார ரயில் மீது கற்கள் வீச்சு சிறுவனுக்கு நெற்றியில் படுகாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூரில் மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு எஸ்.வி.நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (43). இவர் சென்னையில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று ஏகாட்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி, மகனுடன் சென்றார். இதன்பின்னர் வீட்டிற்கு செல்வதற்கு அரக்கோணம் – சென்னை புறநகர் மின்சார ரயிலில் சென்றுள்ளார்.

புட்லூர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அந்த பகுதியில் இருந்த மர்மநபர்கள் சிலர் மின்சார ரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இதில், ரயிலில் கதவு ஓரம் நின்றுகொண்டிருந்த சுப்புராஜின் 6 வயது மகன் நிஷாந்த் நெற்றியில் கல்பட்டு படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து புட்லுர் ரயில்நிலையத்தில் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிஷாந்துக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து சுப்புராஜ் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மின்சார ரயில் மீது கற்களை வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: